Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் சென்னை மெட்ரோ ரயிலை தற்போது அதிக பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பயணநேரம் குறைவது, போக்குவரத்தில் ட்ராபிக் இல்லாமல் இருப்பது, சரியான நேரத்தில் சென்று அடைவது போன்ற பல வசதிகள் இந்த ரயிலில் இருப்பதால் இதனை அனைவரும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்
இருப்பினும் இந்த ரயிலில் பயணம் செய்ய கட்டணம் கொஞ்சம் அதிகமாக இருப்பதாக ஒரு சிலர் குறை சொல்வது உண்டு. இந்த நிலையில் திங்கள் முதல் வெள்ளி வரை மெட்ரோவில் பயணிகளின் கூட்டம் அதிகமாக வந்து கொண்டிருக்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாட்களிலும் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் கணக்கெடுத்தது
இந்த நிலையில் விடுமுறை நாட்களிலும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் பயண கட்டணத்தை பாதியாக குறைக்க மெட்ரோ நிர்வாகம் சமீபத்தில் ஆலோசனை செய்தது. இந்த ஆலோசனைப்படி இன்று முதல் மெட்ரோ ரயில் பயணம் செய்ய ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பாதி கட்டணம் செலுத்தினால் போதும் என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ளது
இதன்படி ஸ்மார்ட் கார்ட் வைத்து மெட்ரோவில் பயணம் செய்யும் மக்கள் குறைந்தபட்சமாக 4 ரூபாயிலும் , அதிகபட்சமாக 27 ரூபாயிலும் பயணம் செய்ய முடியும் என்பதும் ஸ்மார்ட் கார்ட் இல்லாத பயணிகள், விடுமுறை நாட்களில் குறைந்த பட்சம் 5 ரூபாயிலும், அதிகபட்சமாக 30 ரூபாயிலும் பயணம் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.